

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த வெண்பேடு கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன், மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தனது பசு மாடுகளை வீட்டுக்கு வெளியே சாலையோரத்தில் கட்டி வைத்திருந்தார்.
இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது வீட்டின் அருகே இருந்த மின் ஒயர் அறுந்து விழுந்தது. மின்ஒயரில் இருந்த மின்சாரம் தாக்கியதில் 3 பசு மாடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்போரூர் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து ஜானகிராமன் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வருவாய்த்துறையினர் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவ குழுவினர் 3 மாடுகளையும் பிரேத பரிசோதனை செய்தனர்.