

சென்னை,
சென்னையில் நடன கலைஞர் வீட்டில் அம்மன் சிலை மற்றும் பீரோவில் இருந்த 50 சவரன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருபவர் அனிருத் (வயது 45). நடன கலைஞரான இவர், நடன வகுப்பு நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டிலேயே சிறிய காளியம்மன் சிலை வைத்து தினமும் வழிபட்டு வருகிறார். அம்மன் சிலைக்கு தினமும் பூஜை செய்து மதியம் பிரசாதம் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்காக அம்மனுக்கு பூஜை செய்து, பிரசாதம் வழங்க வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரியதர்ஷன்(34) என்ற பூசாரியை பணிக்கு அமர்த்தி இருந்தார். அவருக்கு சம்பளமாக மாதம் ரூ.35 ஆயிரம் வழங்கியதாக தெரிகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக பூசாரி பிரியதர்ஷன் நம்பிக்கையுடன் வேலை செய்து வந்ததால் அனிருத் அவரை வீட்டுக்குள் அனுமதித்து உறவினர் போல நடத்தி வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக அம்மன் சிலையில் இருந்த நகை மற்றும் அனிருத் வீட்டின் பீரோவில் இருந்த நகைகள் என 50 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுபோனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனிருத், இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பூசாரி பிரியதர்ஷன்தான் அம்மன் சிலை மற்றும் அனிருத் வீட்டில் இருந்த நகைகளை சிறுக சிறுக என மொத்தம் 50 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து பிரியதர்ஷனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 30 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.