

சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலைய கார்கோ மூலம் தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி வகைகள், எந்திர உதிரிபாகங்கள், தங்க நகைகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதனால் சென்னை விமான நிலைய கார்கோ பகுதி 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தினமும் 15 முதல் 20-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்கள் வந்து, சரக்குகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. சரக்கு கையாளும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நவீன வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலைய கார்கோவில், கடந்த 2024-2025-ம் ஆண்டை விட 2025-2026-ம் ஆண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி சராசரியாக 6.2 சதவீதமாக உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலைய கார்கோவில் ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகள் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கார்கோ வரலாற்றில் ஒரே மாதத்தில் இந்த அளவு அதிக எடையுள்ள சரக்குகளை கையாண்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், சரக்குகளை கையாளுவதற்கு கூடுதல் இடவசதி தேவை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 5-வது சேட்டிலைட் முனையம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த 5-வது புதிய சேட்டிலைட் முனையம், தற்போதுள்ள 4-வது முனையத்தின் தெற்கு பகுதியில், பல்லாவரம் திசையில் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்தின் 2-ம் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், 5-வது சேட்டிலைட் முனையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.