

சென்னை,
சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, எழும்பூர் ரெயில் நிலையத்த்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 புறநகர் ரெயில்கள் இன்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ள்து.
மேலும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கமாக 10 மற்றும் 11வது நடைமேடைகளில் புறநகர் ரெயில்கள் நின்று செல்லும். ஆனால், தற்போது பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்படும் 5 மற்றும் 6வது நடைமேடைகளில் புறநகர் ரெயில்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரெயில்கள் பல ரத்து செய்யப்பட்டு, ரெயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் இன்று காலை முதல் அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மாலையும் அதே நிலை நீடித்து வருவதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பள்ளி, கல்லூரி, அலுவலம் விட்டு வீடு திரும்பும் பயணிகள் போதிய ரெயில்கள் இல்லாததால் கடும் அவதியடைந்துள்ளனர்.
மேலும், 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு புறநகர் ரெயில் என்ற விகிதத்தில் ரெயில்கள் இயக்கப்படுவதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும், சிக்னலுக்காக கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்டவாளத்தில் புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
ஆங்காங்கே ஒரே தண்டவாளத்த்ல் இரு ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய குளறுபடியால் பயணிகள் ரெயிலிலேயே காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை, போதிய திட்டமிடலின்றி ரெயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதாலும், ரெயில்களை கூடுதலாகவும், உரிய நேரத்திலும் இயக்காததாலும் இத்தகைய குளறுபடிகள் ஏற்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.