சென்னை: ஆபாசமாக பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் - நயினார் நாகேந்திரன் கண்டனம்


சென்னை: ஆபாசமாக பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
x

அவதூறாக பேசிய வட்டச்செயலாளர் மீது வழக்குப்பதிய உத்தரவிடுங்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

சென்னை

சென்னையில் சேப்பாக்கம் பகுதியில் நேற்று முன் தினம் சாலை விபத்து நடந்துள்ளது. போரூரை சேர்ந்த இளைஞரின் வாகனமும், மற்றொருவரின் வாகனமும் விபத்தில் சிக்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது இளைஞரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த சேப்பாக்கம் திமுக 63வது வட்ட செயலாளர் பிரபாகரன், அந்த இளைஞரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இளைஞரை ஆபாசமாக பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் மிரட்டிய சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்காதீர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கு இடையிலான மோதலைக் கட்டப் பஞ்சாயத்து செய்து "தீர்க்க வந்த" சேப்பாக்கம் பகுதி திமுக 63-வது வட்டச் செயலாளர், காதுகள் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் பேசும் காணொளி வெளியாகியுள்ளது.

இப்படி எந்தவொரு அதிகாரமும் நாகரிகமுமின்றி பொதுமக்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நபர்கள் தொடங்கி பெண்களின் பாதுகாப்பைச் சூறையாடும் காமுகர்கள் வரை அனைத்து உடன்பிறப்புகளையும் ஆளுங்கட்சி திமிரை ஊட்டி வளர்த்துவிட்டு, மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுகவின் திராவிட மாடலா? ஆமாம், பொது மேடையில் வைத்தே அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டே பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசும் மூத்த தலைவர்களைக் கொண்ட கட்சி, எப்படி வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும்? ரவுடிகளை மட்டும் தான் வளர்த்துவிடும்!

இத்தகைய கருப்பு சிவப்புப் படையைக் கைக்குள் வைத்துக்கொண்டு, "தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று முழங்குவது வெட்கக்கேடு! தாங்கள் வகிக்கும் பதவியின் பொறுப்புணர்ந்து உடனடியாக, அவதூறாகப் பேசிய வட்டச்செயலாளர் மீதும், இருசக்கர வாகன உரிமையாளரைத் தாக்கிய கார் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிய உத்தரவிடுங்கள்!

என தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story