

சென்னை,
தமிழகத்தில் கஞ்சா, கொக்கைன், குட்கா உள்பட அனைத்து வகையான போதைப்பொருட்கள் விற்பனை, பயன்படாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வெளிமாநிலங்களில் இருந்து பஸ், ரெயில்கள், விமானங்கள் மூலம் போதைப்பொருள் மாநிலத்திற்குள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பல்லாவரம் நாகல்கேணி பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, கைதான அமீர் (28), சிவமணி (22), பால்ராஜ் (30), அபிஷேக் (21), முகமது ஆயுப் கான் (24) ஆகியோரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.