

சென்னை,
சென்னை குடிநீர் விநியோகம், துப்புரவு வசதிக்கான கட்டமைப்பை நவீனமாக்குவதற்கு திட்டத்திற்கு கடனுதவிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் குடிநீர் விநியோகம், துப்புரவு வசதிக்கான கட்டமைப்புகளை நவீனமயமாக்கி விரிவுப்படுத்துவதற்காக 230 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,950 கோடி) மதிப்பிலான கடன் ஒப்பந்தம், இந்தியா – ஆசிய வளர்ச்சி வங்கி இடையே கையெழுத்தாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான இணைச்செயலாளர் பல்தியோ புருஷார்த்தா வழிகாட்டுதலின் கீழ் இந்தியா – ஆசிய வளர்ச்சி வங்கி இடையே கடனுதவியை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் சௌரப் சிங், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியப் பிரிவு இயக்குநர் மியோ ஓகா ஆகியோர் இந்த கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
சென்னையில் பருவமழையைத் தாங்கும் திறன் கொண்ட நீர்ப்பாதுகாப்பு, கழிவுநீர் அகற்றும் திட்டம், மாநகர் முழுவதும் பாதுகாப்பான, நம்பகமான குடிநீர் விநியோகம், சிறந்த துப்புரவு சேவைகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தவும், பொது சுகாதாரம், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் திறன் வாய்ந்த நிதி ரீதியாக நீடித்த நகர்ப்புற நீர்க் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் இது உதவிடும்.
இத்திட்டத்தின் கீழ், 170 கி.மீ நீளத்திற்கு குடிநீர், கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும். ஏழு நீர் இறைப்பு நிலையங்கள், 38 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் மேம்படுத்தப்படும். மேலும், செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் மூலம் நீர் பயன்பாடு மற்றும் செயல்பாட்டு மேலாண்மை அமைப்புகள் வலுப்படுத்தப்படும். இதன் மூலம், சென்னை நகர்ப்புற குடிநீர் விநியோக அமைப்பில் நம்பகத் தன்மை, சமநிலை, இடர்களை தாங்கும் திறனை மேம்படுத்தி சீரான நீர் அழுத்தத்தை பாராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.