

சென்னை,
சென்னை, மயிலாப்பூர் சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன அதிகாரியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 58). அவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். கிருஷ்ணன் தனது அலுவலக வேலை சம்பந்தமாக கடந்த 18- ந்தேதி சென்னை வந்தார்.
அவர் சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஆர்.கே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் தனது பைக்கில் ஒரு ஆணை பின்னால் அமர வைத்து சென்றார். பைக்கின் பின்னால் உக்கார்ந்திருந்த நபர் கோபால கிருஷ்ணன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். பின்னர் அந்த நபர் பைக்கில் வந்த பெண்ணுடன் மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன் ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்த கேமராவில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தங்க சங்கிலியை பறித்த புளியந்தோப்பை சேர்ந்த முகமது உசேன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து தங்க சங்கிலி மீட்கப்பட்டது. பைக்கை ஓட்டி வந்தது உசேனின் மனைவி என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.