

சென்னை,
சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக எழுந்த லஞ்ச ஒழிப்பு புகாரை விசாரித்து, ஆய்வாளர் விமலா அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இந்த லஞ்ச ஒழிப்பு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை , கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. அதில், ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே மனுதாரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி இந்த அறிக்கையை ஆய்வு செய்து, சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், வழக்கு பதிவு செய்த காரணத்திற்காக மனுதாரரான விமலாவை சஸ்பெண்ட் செய்து கடந்த ஜுன் 17 ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இன்ஸ்பெக்டர் விமலா மீதான இந்த சஸ்பெண்ட் உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்பது முதற்கட்டமாகத் தெரிகிறது. ஜூலை 9ம் தேதிக்குள் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும்.
மேலும், இந்த இடைநீக்க உத்தரவிற்கு வரும் ஜுலை 9 வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாகத் தரப்பு பதிலளிப்பதற்காக வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜுலை 9 ஆம் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.