சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்

சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டி.எஸ்.பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்தார். மேற்குவங்காளத்தை சேர்ந்த அந்த மாணவி ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இதனிடையே, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

மாணவியின் புகாரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியான மேற்குவங்காளம் டைமண்டு ஹார்பர் மாவட்டம் ராய்நகரை சேர்ந்த கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரை மேற்குவங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை சென்னை அழைத்துவர போலீசார் அனுமதி கேட்டார்கள். அதற்கு அனுமதி மறுத்த கோர்ட்டு, அவரை ஜாமீனில் விடுவித்து விட்டது.

கிங்சோ தெப்சர்மாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில் கோட்டூர்புரம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க தினமும் முக்கிய சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சென்னை போலீசிடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டி.எஸ்.பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com