மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் விற்பனையா? சென்னை மருத்துவக்குழு விசாரணை

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்து சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சென்னை மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் விற்பனையா? சென்னை மருத்துவக்குழு விசாரணை
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் நரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சீரங்கன் (வயது 39). கடந்த 25-ந் தேதி விபத்தில் சிக்கிய இவர்,சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் தனியாருக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்ட மருத்துவக்குழுவினர் தனியார் ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தினர்.

உடல் உறுப்புகள் விற்பனையா?

இந்தநிலையில் நேற்று மீண்டும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மற்றும் சீரங்கன் குடும்பத்தினரிடம் சென்னையில் இருந்து வந்த 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது உடல் உறுப்புகள் விற்கப்பட்டதா என்பது குறித்து நரிப்பள்ளம் பகுதியில் உள்ள இறந்த சீரங்கன் குடும்பத்தினரிடம் மருத்துவ குழுவினர் நேரில் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இறந்த சீரங்கனின் உடல் தானம் செய்ய தனியார் ஆஸ்பத்திரி சார்பில் வலியுறுத்தப்பட்டதா?, அதற்காக பணம் பெறப்பட்டதா?, அல்லது தானாக முன் வந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் நடைமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு உடல் உறுப்பு தானம் செய்யலாம். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் பேரம் பேசப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தவறு செய்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com