சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் - டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 முதல் 11.30 மணிக்குள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இதற்கான விழா ஏற்பாடு நடந்து வருகிறது.

25-ந்தேதி முதல் சென்னையில் இருந்து நெல்லைக்கும் 27-ந்தேதி முதல் நெல்லையில் இருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கான டிக்கெட் கட்டணம் ஐஆர்சிடிசி இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை எக்மோரில் இருந்து நெல்லைக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம் ரூ.1,155, முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவிரைவு கட்டணம் ரூ.45, உணவு கட்டணம் ரூ.308 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.62 சேர்த்து மொத்தமாக ரூ.1,610 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் வகுப்பு ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம் ரூ.2,375, முன்பதிவு கட்டணம் ரூ.60, அதிவிரைவு கட்டணம் ரூ.75, உணவு கட்டணம் ரூ.369 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.126 சேர்த்து மொத்தமாக ரூ.3,005 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நெல்லையில் இருந்து சென்னை எக்மோருக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம் ரூ.1,154, முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவிரைவு கட்டணம் ரூ.45, உணவு கட்டணம் ரூ.364 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.62 சேர்த்து மொத்தமாக ரூ.1,665 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம் ரூ.2,375, முன்பதிவு கட்டணம் ரூ.60, அதிவிரைவு கட்டணம் ரூ.75, உணவு கட்டணம் ரூ.419 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.126 சேர்த்து மொத்தமாக ரூ.3,055 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com