சென்னையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம்

எண்ணூர் - மணலி சாலை மேம்பாட்டு திட்ட வழித்தடத்தில் அதிகபட்ச போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.
சென்னையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம்
வாகனங்கள் அகற்றம்
Published on

சென்னை,

சென்னையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம். இது தொடர்பாக, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தடையற்ற போக்குவரத்தை பராமரிப்பதற்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட செயலாக்க பிரிவு, சென்னையில் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள அனுமதியற்ற வாகன நிறுத்தம், ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான தனது நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

சுமார் 350 வாகனங்கள் அகற்றம்

இந்நடவடிக்கையில் தமது எல்லைக்குட்பட்ட வரம்பிற்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 லாரிகள், வேன்கள், வர்த்தக வாகனங்களை கண்டறிந்து, அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது.

ஆய்வு

வாகன ஓட்டுநர் ஓய்வெடுக்கும்போதும், சாலையோர உணவகங்களுக்கு செல்லும்போதும், சரக்குகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் காத்திருக்கும்போதும், அல்லது போக்குவரத்து காவல்துறையினரால் அமல்படுத்தப்பட்ட சென்னை நகருக்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டு நேரத்திற்காக காத்திருக்கும்போதும் வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருந்தது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்

எண்ணூர் - மணலி சாலை மேம்பாட்டு திட்ட வழித்தடத்தில் அதிகபட்ச போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. அங்கு மணலி, எலந்தனூர், இடையஞ்சாவடி, மாதவரம், மாத்தூர், கோசாப்பூர், ரெட் ஹில்ஸ் சுங்கச்சாவடி, திருவொற்றியூர், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 198 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன.

மேலும், தேசிய நெடுஞ்சாலை-5 சாலையில் 142 வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலை-48 சாலையில் 8 வாகனங்களும், சென்னை துறைமுகம் - மதுரவாயல் பிரிவில் 4 வாகனங்களும் அகற்றப்பட்டன.

எச்சரிக்கை

விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவதை உறுதிசெய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மண்டல போக்குவரத்து அலுவலர்கள், உள்ளூர் காவல்துறை, மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com