சென்னை: வழிகாட்டி பலகை சரிந்து விபத்து - சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு...!

சென்னை கத்திப்பாராவில் மாநகர பஸ் மோதி வழிகாட்டி பெயர் பலகை தூண் சரிந்து விழுந்து 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
சென்னை: வழிகாட்டி பலகை சரிந்து விபத்து - சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு...!
Published on

சென்னை,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று மதியம் 3 மணியளவில் மாநகர பஸ் சென்றது. பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பியபோது, அதிவேகமாக வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை வளைவு பகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகை ராட்சத இரும்பு தூண் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பெயர் பலகையுடன் ராட்சத தூண் சரிந்து சாலையின் குறுக்கே இருபக்கமுமாக விழுந்தது. அப்போது கிண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், மற்றும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற மினிவேன் மீது வழிகாட்டி பெயர் பலகை விழுந்தது.

இதில் வழிகாட்டி பெயர் பலகைக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முக சுந்தரம்(வயது 28) படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பெயர் பலகை விழுந்ததில் சாலையில் கவிழ்ந்த மினிவேன் டிரைவர் ஜான்பீட்டர்(43) மற்றும் ராட்சத இரும்பு தூண் மீது மோதியதில் மாநகர பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்ததால் பஸ்சில் பயணம் செய்த 4 பயணிகள் என 5 பேர் காயம் அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வழிகாட்டி பலகை சரிந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரம் உயிரிழந்துள்ளார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com