சென்னை: மெட்ரோ பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

“பாதுகாப்பே முதன்மை” என்ற பணிச்சூழலை உருவாக்குவதன் அவசியம் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை: மெட்ரோ பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-II கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 28.08.2026 அன்று நந்தனத்தில் உள்ள மெட்ரோஸ் அரங்கில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் (DISH - Directorate of Industrial Safety and Health) சார்பில், கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் (BOCW - Building and Other Construction Workers Welfare Board) இணை இயக்குநர் ராஜ்குமார் தலைமையில், துணை இயக்குநர்கள் மணிசங்கர் மற்றும் சுவேதா ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் குழுவின் பாதுகாப்பு அணியினரால் கூட்டாக நடத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் கவுண்டின்ய போஸ் (பாதுகாப்பு மற்றும் தரம்), பொது ஆலோசகர் குழுவின் தலைவர் முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்

கட்டுமானப் பணிகளின்போது விபத்துகளைத் தடுப்பது, பாதுகாப்பற்ற செயல்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிந்து தடுப்பது, பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்வது, சட்டபூர்வமான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் பணியாளர்களை திறம்படக் கண்காணிப்பது உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பொது ஆலோசகர்கள் மற்றும் கட்டம்-II-ன் ஒப்பந்ததாரர் நிறுவனங்களைச் சேர்ந்த பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் மேஸ்திரிகள் உள்ளிட்ட சுமார் 200 பேர் பங்கேற்றனர்.

பாதுகாப்பே முதன்மை

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-II கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், அனைத்து நிலைகளிலும் “பாதுகாப்பே முதன்மை” என்ற பணிச்சூழலை உருவாக்குவதன் அவசியம் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

கட்டம்-II திட்டப் பணிகளில் பாதுகாப்புத் தரங்களை மேலும் மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவை வழங்கிய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com