

சென்னை,
தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.
இந்த விழாவின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நலத்திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இனிவரும் தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
அடுத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருப்பதாகவும், புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் கூறினார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து துணை முதலமைச்சர் கூறியதை தனது உரையின் போது முதலமைச்சர் பழனிசாமி உறுதி செய்தார்.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய போது, தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்த திட்டங்கள் மற்றும் நிதிகள் ஆகியவை உதவிகள் அல்ல என்றும் அவை மாநில உரிமைகள் என்றும் தெரிவித்தார். மேலும் ஊழல் குறித்து பேசிய திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன தகுதி உள்ளது? என்று கேள்வி எழுப்பிய அவர், குடும்ப அரசியலுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.
இதனையடுத்து விழா நிறைவு பெற்ற பின்னர் அமித்ஷா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.