

சென்னை,
தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிதாக 6 மாவட்டங்களை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, திருநெல்வேலியில் இருந்து தென்காசி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்தார். இதன் பிறகு புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்கான சிறப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அனைத்து அரசு நிர்வாகப் பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.