மாவீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்: கவர்னர் , முதல்-அமைச்சர் புகழாரம்

வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார் .
சென்னை ,
மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில்,மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம் . சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம். என தெரிவித்துள்ளார் .
கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கொடுங்கோல் காலனித்துவ ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி மகத்தான தியாகம் செய்த அச்சமற்ற தளபதி, தொலைநோக்குத் தலைவர் மற்றும் வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் #ஒண்டிவீரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். அவரது ஈடு இணையற்ற துணிச்சலும் தியாகமும் நமது நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தன. அவரது நீடித்த மரபு, மீள்தன்மை மற்றும் சுயசார்பு வளர்ச்சியடைந்தபாரதம்2047 - ஐ உருவாக்க நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது. என தெரிவித்துள்ளார் .






