துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

துரை தயாநிதி கடந்த மார்ச் 14-ம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மார்ச் மாதம் 14-ம் தேதி மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை ரத்தநாள கசிவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் துரை தயாநிதியை 2வது முறையாக நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். துரை தயாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

முதல்-அமைச்சரின் வேலூர் வருகையையொட்டி வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஆகிய இடங்களில் வேலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் சிஎம்சி மருத்துவமனை முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு முழுமையாக சோதனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com