

சென்னை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த வகையில், காவல் துறை சார்பில் ரூ.75 கோடியே 80 லட்சத்து 17 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 200 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 8 காவல்துறை இதர கட்டிடங்கள், ரூ.15 கோடி செலவில் 22 காவல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவல்துறைக்கு வழங்கினார்.
இதேபோல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ரூ.42 கோடியே 94 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 14 விளையாட்டு துறை கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.37 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டிலான 3 புதிய திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.