சேலத்தில் 11, 12-ம் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

12-ந்தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சேலம்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலமாக புறப்பட்டு 11 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைகிறார்.
அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்,
அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாலை சேலம் செல்லும் அவர், சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவே முதலமைச்சர் செல்லும் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முடித்துவிட்டு இரவு மேட்டூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், ஜூன் 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்,
இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஜூன் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு சேலத்திலிருந்து விமான மூலமாக புறப்பட்டு சென்னை வருகிறார்.