

சென்னை,
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்துகள் இயக்குவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டர். மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து தனது உரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தொற்று பரவலை தடுக்க 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 75,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன
சென்னையில் வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அதாவது நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மண்டலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம். கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவர்க்கும் அரசின் சார்பில் நன்றி.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 80% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டத்திலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். ஏழை மக்களுக்கு ரூ.1000 நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
கொரோனா தொடர்பாக பிரதமருடன் 6 முறை, ஆட்சியர்களுடன் 7 ஆலோசனை நடத்தப்பட்டது. 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.