

சென்னை,
சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தான் வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும்.
இந்த 6 மாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது. மேலும் சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட உள்ளது. மேலும் துறை ரீதியான புதிய திட்டங்கள், ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை, தொழில் நிறுவனங்களுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.