சென்னையில் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்தியாவில் மின்னணு சார்ந்த பொருட்களின் தயாரிப்பை அமேசான் இந்தியா நிறுவனம் துவங்கவிருப்பதாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சட்டம், நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன், அமேசான் நிறுவனத்தின் சர்வதேச மூத்த துணைத் தலைவரும் இந்தியாவிற்கான தலைவருமான அமித் அகர்வாலுடன் காணொலி வாயிலான நடந்த கூட்டத்திற்குப் பிறகு, அந்த நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சென்னையில் உற்பத்தி நிலையத்தைத் தொடங்கும் அமேசானின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் உள்நாட்டு தயாரிப்புகளின் திறன் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். நமது தற்சார்பு இந்தியா கனவிற்கு இதன்மூலம் டிஜிட்டல் வாயிலாக அதிகாரமளிக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்தை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அமேசான் நிறுவனத்தின் இந்த முயற்சி,ஏராளமானோருக்கு அதிக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com