

சென்னை,
தமிழகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மே 1ஆம் தேதி முதல் 18 - 45 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில், நாடு முழுவதும் 18 முதல் 45 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதனால் வழக்கத்தை விட மாநிலங்களுக்குக் கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும். தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மொத்தமாக வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும். மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கவேண்டும். மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. சில உற்பத்தியாளர்கள் தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளனர். தடுப்பூசி திட்டத்திற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டியிருந்தது. கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளை வல்லுநர்கள் மூலம் ஆராய வேண்டும் என்றும் அதில் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.