

சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் இன்று 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கித் தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககம், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள ஸ்கேன் மையங்களில் கருவுறுதலுக்கு முன், கருவுறுதலுக்கு பின் பாலின தேர்வு தடைச்சட்டம் 1994-ன்படியும் மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997-ன்படியும் சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், முறையாக பதிவு பெறப்பட்டு இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ளவும்,
பேரிடர் மற்றும் பெருந்தொற்றுக் காலங்களில் மக்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், போலி மருத்துவர் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் இப்புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.