

சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று (16-ம் தேதி) மற்றும் நாளை (17-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பேரவை நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான பயிலரங்கை முதல்-அமைச்சர் விஜய் தற்போது குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில் அவை மரபுகள், சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் அர்லேகர் உரையுடன் நாளை மறுநாள் (18-ந் தேதி) கூட இருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்த புத்தாக்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.