நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க வரும் திங்கள்கிழமை முதல் அமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்
Published on

சென்னை,

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

நன்றி தெரிவிக்கும் விஜய்

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதல் அமைச்சர் விஜய், வரும் திங்கள்கிழமை அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி கிழக்கு தொகுதி செல்லும் விஜய், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இடைத்தேர்தல்

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 91,381 வாக்குகள் பெற்று 24,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தொகுதியில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன் 19,715 வாக்குகள் மட்டுமே பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் அங்கு செல்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அண்மையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அந்த வகையில், திருச்சி கிழக்குடன் சேர்த்து பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com