

சென்னை,
சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனவும், மாற்றம் வரும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாக கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,"கடந்த ஆட்சியில் ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவித்தது என்ன ஆனது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுகிறார். விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் நெல்லைச் சேமித்து வைக்க இடமில்லாத நிலை இருந்தது. நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர். கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து சென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என சாமி அமைச்சரை பார்த்தாலே தெரிகிறது" என்றார். இந்து சமய அறநிலைதுறை அமைச்சரை சாமி அமைச்சர் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறிய நிலையில் இதனை கண்ட முதல்-அமைச்சர் விஜய் அவையில் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
மேலும், இப்போதுதான் எப்படி பிரசாரம் செய்கிறீர்கள் என்று தெரிகின்றது. அவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்று தெரியாதவாறு டெக்னிக்காக பேசுகிறார் என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். தொடர்ந்து, தவெகவினரை நோக்கி நீங்களெல்லாம் படத்தைப் பார்த்து வந்தவர்கள். நாங்களும் அதிமுகவினரும் கொள்கையைப் படித்து, களத்தில் போராடி வந்தவர்கள்.
திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது. தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக் தெரிகிறது என்று கூறினார். அதற்கு அமைச்சர் ரமேஷ் அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன் என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.