

சென்னை,
பெருகி வரும் மக்கள் தொகையை ஈடு செய்யும் பொருட்டு நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ. 914.42 கோடி மதிப்பில் செயல்படுத்த 2009ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 40.05 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் திருவாளர்கள் வி.ஏ.டெக் வாபாக் நிறுவனம் மற்றும் திருவாளர்கள் ஐ.டி.இ. தொழில் நுட்பம் கொண்ட கூட்டு நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் 23.02.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு, இந்நிலையம் 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லுார் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்கு குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாகவும் மக்களுக்கு வழங்கப்படுதன் மூலம் சுமார் 10 லட்சம் மக்கள் பயனடைகிறார்கள்.
முதல் அலகு 110 மில்லியன் லிட்டர் திறனுடன் 2013ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் , அடுத்த அலகு 150 மில்லியன் லிட்டர் திறனுடன் 2024ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து, நெம்மேலியில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படும் வகையில் மூன்றாவது புதிய ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, திட்ட செயல்பாடு, உற்பத்தித் திறன், விரிவாக்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்தார். மேலும், குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
நெம்மேலியில் 110 - 150 எம்.எல்.டி உற்பத்தி திறன் நிலையங்கள் மூலம் தினமும் 1,230 மில்லியன் லிட்டர் குடிநீர் தரப்படுகிறது. இதன் மூலம் சுமார் 22 லட்சம் மக்கள் பயனடைவர்.