

சென்னை,
தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக நாளை (புதன் கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.
தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தொடர்பாக ஆகஸ்டு 8ம் தேதி அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக நாளை (12.08.2026) சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற பேரவை நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளதாவது:-
2026 ஆகஸ்டு 12ம் தேதி, புதன்கிழமை காலை 9.30 மணி
1. அரசினர் தனித் தீர்மானம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-
"தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 2026-இல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.
இந்நிலையில் மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.
ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.
எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும். மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேவேளையில்,பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது.
i) நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
ii) தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
iii) வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
2. 2026-2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை
2026-2027-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.