இங்கிலாந்தில் இருந்து மீட்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்ட முதல்-அமைச்சர் விஜய்

கும்பகோணத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலிலிருந்து திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை உட்பட 4 சிலைகள் களவாடப்பட்டன.
இங்கிலாந்தில் இருந்து மீட்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்ட முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலிலிருந்து களவாடப்பட்டு, இங்கிலாந்து நாட்டிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்-அமைச்சர் விஜய் நேற்று (17.8.2026) தலைமைச் செயலகத்தில் வைத்து பார்வையிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலிலிருந்து 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் மதிப்புமிக்க திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையும், மூன்று உலோகச் சிலைகளான காளிங்கநர்த்தனர் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி என மொத்தம் 4 சிலைகள் களவாடப்பட்டதாக அத்திருக்கோவிலின் செயல் அலுவலரால் கடந்த 12.02.2020 அன்று புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இச்சிலையை, அந்த அருங்காட்சியகம் 1967-ம் ஆண்டு அடையாளம் தெரியாத விற்பனையாளரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும், தொடர் விசாரணையில், அமெரிக்க நாட்டின், சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் காளிங்கநர்த்தனர் உலோகச் சிலையும், புளோரிடாவிலுள்ள ஹில் ஏலக் காட்சியகத்தில் ஸ்ரீதேவி உலோகச் சிலையும், டெக்சாசிலுள்ள கிம்பெல் கலை அருங்காட்சியகத்தில் விஷ்ணு உலோகச் சிலையும் இருப்பது கண்டறியப்பட்டது.

சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகள், திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையின் பூர்வீகம் மற்றும் உண்மையான தோற்றம் தொடர்பான அனைத்து அறிவியல் ஆதாரங்களையும் சேகரித்ததோடு, நம்பகமான மற்றும் மறுக்க முடியாத ஆதாரங்களைத் தொகுத்து, இங்கிலாந்து நாட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததன் அடிப்படையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி, சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவால் வழங்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வுசெய்து, விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கவுன்சில் ஏற்றுக்கொண்டதோடு, திருமங்கை ஆழ்வார் சிலையை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவந்து ஒப்படைப்பதற்கான தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்தது.

அதன் அடிப்படையில், தூதரக நடவடிக்கைகளின் மூலம் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, தமிழ்நாடு அரசின் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு, இந்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், கலாசார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் தமிழ்நாட்டிற்கு 16.08.2026 அன்று வெற்றிகரமாக மீட்டுக் கொண்டுவரப்பட்டது.

மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்-அமைச்சர் விஜய்யிடம் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் (சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு) டி. கல்பனா நாயக், ஆகியோர் காண்பித்தனர். அப்போது முதல்-அமைச்சர், இச்சிலையை மீட்டுக் கொண்டுவந்த சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவினருக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் நிறைவடைந்த பின்னர், திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, அதன் மூலக்கோவிலில் நடைமுறையிலுள்ள சமயச் சம்பிரதாயங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளின்படி பொதுமக்களின் வழிபாட்டிற்காக மீண்டும் நிறுவப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் இருந்து மீட்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்ட முதல்-அமைச்சர் விஜய் - Chief Minister Vijay visits Thirumangai Azhwar statue brought back from England

கும்பகோணத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலிலிருந்து திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை உட்பட 4 சிலைகள் களவாடப்பட்டன - 4 statues, including a bronze statue of Thirumangai Azhwar, were stolen from Soundararaja Perumal temple in Kumbakonam

X

Daily Thanthi
www.dailythanthi.com