

சென்னை,
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“த.வெ.க. ஆட்சியில் எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் பணத்தில் ஊழல் செய்வது என்பது நடக்கவே நடக்காது. அப்படி நாங்கள் யாராவது தவறு செய்தால் உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் எங்களை அந்த பதவியில் இருந்து நீக்கி விடுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக்கூடிய ஒரு ஆட்சியாகத்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி இருக்கும். கூடிய விரைவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி மற்றும் கடன் வசதி எல்லாம் வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் விஜய் செய்து கொண்டிருக்கிறார்.
நீங்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம். எதைப் பற்றியுமே நீங்கள் கவலையே பட வேண்டாம். எந்த ஒரு சின்ன விஷயம் உங்களுக்கு தேவை என்று சொன்னாலும் நாங்கள் அதை செய்து கொடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறோம், கண்டிப்பாக நாங்கள் செய்வோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.