

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜிகணேசன் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால், சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்து, அதன்பிறகு மார்க்கெட் இழக்கும்போதுதான் பலர் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். இதுதான், கடந்த கால சினிமா வரலாறு.
ஆனால், உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த போதே, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் நடிகர் விஜய். அதுவும் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய 2½ ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் ஆட்சியையும் பிடித்துவிட்டார்.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும், அவர் முதலில் சொன்னதுபோல கூட்டணி ஆட்சியை ஏற்படுத்திக்கொண்டு, தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இருபெரும் திராவிட கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஆட்சியை நடத்த தொடங்கியிருக்கிறார்.
அவருடைய 2 மாத கால ஆட்சியில், பெண்கள் - சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், மின்தடை பிரச்சினை ஆகியவை அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மற்றபடி, த.வெ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் முந்தைய ஆட்சிக்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கே உள்ளது.
முதல்-அமைச்சர் விஜய், நடிகராக இருந்தபோது அவருடைய திரைப்படங்களில் பல, தமிழைத் தாண்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் 'டப்' செய்து வெளியிடப்பட்டிருக்கின்றன. இதனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். பல இடங்களில் அவருக்கு ரசிகர் மன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கொண்டுவரும் திட்டங்கள், அவருடைய செயல்பாடுகளை அண்டை மாநில தனியார் தொலைக்காட்சிகளும் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இது விஜய்யினுடைய அண்டை மாநில ரசிகர்களையும், அங்குள்ள பொதுமக்களையும் ஈர்த்து வருகின்றன.
அந்த வகையில், நேற்று முதல்-அமைச்சர் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். இந்தக் காட்சி, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடப்பட்டதுடன், அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களிலும் வீடியோவாக காட்சிப்படுத்தப்பட்டது. இது அங்குள்ள விஜய் ரசிகர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.
பலர் அந்த வீடியோவுக்கு கீழே, 'கமெண்ட்' பகுதியில் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், "இப்படி ஒரு முதல்வரை பெற்ற தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள்", "கர்நாடகாவில் இவர்தான் நிக்கிறாரு", "இந்த தலைவர் நம்ம கர்நாடகாவுக்கு வரனும்", "கர்நாடகாவுக்கு இந்த தலைவனை கொடு இறைவா", "தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டம் செய்திருக்கிறார்கள்", "தமிழக மக்கள் சரியாக தேர்வு செய்திருக்கிறார்கள்" என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், தமிழகத்தையும் தாண்டி அண்டை மாநிலங்களிலும் முதல்-அமைச்சர் விஜய்யின் புகழ் பரவத் தொடங்கியிருக்கிறது. அங்குள்ள ரசிகர் மன்றங்களும் அரசியல் இயக்கமாக உருவெடுத்தால், தென்மாநில முக்கிய அரசியல் தலைவராக விஜய் உருவெடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.