46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விருதுகள்: தமிழக டிஜிபி வழங்கினார்

தமிழ்நாட்டில் இன்று முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் கடந்த 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்து அரசாணை எண்.314 உள் (காவல்.8) துறை நாள்.24.6.2025-னை வெளியிட்டார்.
முதல் காவலர் நாள் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், சென்னையில் தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு குறித்த சிறப்புத் திரையிடலுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. 2023-ம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் ஒவ்வொரு மாவட்டம்/ நகரம்/ பெருநகர சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 46 சிறந்த காவல் நிலையங்களின் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, தமிழக டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமன் தமிழக முதல்-அமைச்சரின் விருதுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அவர் பேசியபோது, காவலர் நாளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் அவர், காவல் படையினர் கடமை, மரியாதை மற்றும் சேவையின் லட்சியங்களுக்கு தங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும், பயம் மற்றும் பாரபட்சம் இல்லாமல் நீதியை நிலைநாட்ட வேண்டும், ஒழுக்கம் மற்றும் நேர்மையைப் பேண வேண்டும், பொதுமக்களுக்கு இரக்கத்துடன் சேவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் பேசினார். அதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
காவல் தினக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்று பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன. மேலும் பொது சேவை மற்றும் நீதிக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.






