காவல் அதிகாரி பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சென்னை காவல் அதிகாரி பாலமுரளியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காவல் அதிகாரி பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவு
Published on

சென்னை,

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கும் சென்னையில் பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த 47 வயது பாலமுரளி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி பாலமுரளி உயிரிழந்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாலமுரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினறை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பாலமுரளியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். மேலும் பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com