

சென்னை,
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சமுதாய வளர்ச்சிக்காக தன்னார்வத்துடன் சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதல்-அச்சர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் (06.07.2026) முடிவடைகிறது. இதற்கான நாளை 13.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதிற்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர் 01.04.2025 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2026 அன்று 35 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (01.04.2025 முதல் 31.03.2026 வரை) சமுதாய நலனுக்காகத் தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட, உறுதிப்படுத்தக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய சேவைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கு முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்) மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும், விண்ணப்பதாரரின் உள்ளூர் மக்களிடையிலான நன்மதிப்பும் சமூகச் செல்வாக்கும் பரிசீலனையில் கருத்தில் கொள்ளப்படும்.
இவ்விருதிற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 13.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடையவர்கள் உரிய காலத்திற்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான இவ்விருது 15.08.2026 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1,00,000/- ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.