முதல்-அமைச்சர் வருகை.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் சிவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்டு ஏவியேஷன் லிமிடட், ஓசூர் நல்லூர் எல்காட், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரிகளில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.
எனவே மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சிவில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் எந்தவொரு சிவில் டிரோனையும் பறக்கவிட அனுமதி இல்லை.
இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 163-ன் சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் டிரோன்களை பறக்க விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






