

சென்னை,
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் திரு முருகானந்தம், இந்திய தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி, வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதும், முன்னாள் முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றியவர் புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதும் ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முன்னதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமனம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் தமிழ்நாடு அரசின் அதிகார கட்டமைப்பை நிலை குலைக்கும் அத்துமீறலாக கருதப்படுகிறது. ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து செல்கிறது என்று வலுவாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் உறுதி செய்து வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்குமா? என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறியிருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பாஜக விற்கு சாதகமாக, பாரபட்ச போக்கில் செயல்படுவதையும் சேர்த்து முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, ஜனநாயகத்தை பாதுகாக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பேராதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.