கவர்னர் அர்லேகரை சந்தித்த தலைமை செயலாளர், டி.ஜி.பி.

விஜய்க்கு எந்த அடிப்படையில் கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டது? என கவர்னர் அர்லேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கவர்னர் அர்லேகரை சந்தித்த தலைமை செயலாளர், டி.ஜி.பி.
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

இந்த பரபரப்பான சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் கோரிக்கை வைத்தார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கவர்னரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் சந்திப்பை தொடர்ந்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கவர்னர் அர்லேகரை இன்று சந்தித்துள்ளனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னரை சந்தித்து பேசினார். மாநில சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கவர்னரிடம் அவர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் கவர்னரை சந்திக்க கிண்டி கவர்னர் மாளிகைக்கு வருகை தந்தார். பின்னர் கவர்னவரை சந்தித்த டி.ஜி.பி.யிடம், த.வெ.க. தலைவர் விஜய்க்கு எந்த அடிப்படையில் கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டது? என கவர்னர் அர்லேகர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு டி.ஜி.பி.யிடம் கவர்னர் அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com