பிறந்து 12 நாட்களேயான பச்சிளங்குழந்தை தொட்டிலில் தூங்கியபோது திடீர் சாவு; அந்தியூர் அருகே பரிதாபம்

அந்தியூர் அருகே பிறந்து 12 நாட்களேயான பச்சிளங்குழந்தை தொட்டிலில் தூங்கிய போது திடீரென இறந்தது.
பிறந்து 12 நாட்களேயான பச்சிளங்குழந்தை தொட்டிலில் தூங்கியபோது திடீர் சாவு; அந்தியூர் அருகே பரிதாபம்
Published on

அந்தியூர்

அந்தியூர் அருகே பிறந்து 12 நாட்களேயான பச்சிளங்குழந்தை தொட்டிலில் தூங்கிய போது திடீரென இறந்தது.

பச்சிளங்குழந்தை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி குப்பாண்டபாளையம் அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தவகிருஷ்ணன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவரும் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரை சேர்ந்த பவித்ரா (வயது 20) என்பவரும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் பவித்ரா கர்ப்பம் ஆனார். கடந்த மாதம் 29-ந் தேதி அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து தாயும், சேயும் வீடு திரும்பினர்.

இறந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பவித்ரா குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தை அசைவின்றி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே குழந்தையை சிகிச்சைக்காக அருகே உள்ள கருல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை

குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் இதுகுறித்து குழந்தையின் தந்தை தவகிருஷ்ணன் ஆப்பக்கூடல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து குழந்தை எப்படி இறந்தது என்று விசாரணை நடத்தி வருகிறார்.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com