

ஓமலூர்,
மேச்சேரி அருகே உள்ள சீராமணியூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30). இவர் உணவு பாதுகாப்பு துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஹரிப்பிரியா (23). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், ஹரிப்பிரியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நேற்று முன்தினம் ஹரிப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆம்புலன்ஸ் ஓமலூரை அடுத்த தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது ஹரிப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே டிரைவர் குமார் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தினார். ஆம்புலன்சில் இருந்த அவசரகால மருத்துவ நுட்புனர் உமாராணி, ஹரிப்பிரியாவுக்கு பிரசவம் பார்த்து சிகிச்சை அளித்தார். அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புனர் உமாராணி மற்றும் டிரைவர் குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.