18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்த கூடாது: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை


18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்த கூடாது: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
x

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியில் அமர்த்தக் கூடாது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை 2025-க்குள் மாற்ற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்பு படை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், கட்டுமானப் பணியிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் காண வாய்ப்புள்ள அனைத்துத் தொழிற்கூடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட தடுப்புப் படை, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அரசுத் துறை அலுவலர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

2024 மற்றும் 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ், மாவட்ட தடுப்புப் படையுடன் கூட்டாய்வுகள் மற்றும் இதர புகார்களின் அடிப்படையில் கடைகள் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 3 குழந்தைத் தொழிலாளர்கள், 7 வளரிளம் பருவத் தொழிலாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வேலையளிப்பவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியில் அமர்த்தக் கூடாது. குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமோ 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமே சேர்த்தோ விதிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை எவரேனும் பணியில் அமர்த்தியிருந்தால் அது குறித்த விவரத்தினை குழந்தைப் பாதுகாப்பு உதவி எண் 1098 என்ற எண்ணிற்கு அழைத்தோ அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு 0461-2340443 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story