குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம்.. அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

அட்டைப் பெட்டியில் குழந்தையின் உடலை கொண்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம்.. அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்
Published on

சென்னை:

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மசூத் என்பவரின் மனைவி சவுமியாவுக்கு கடந்த 5-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மழைநீர் தேங்கியிருந்ததால் ஆம்புலன்சை வரவழைக்க முடியவில்லை. உரிய மருத்துவ உதவி கிடைக்காத நிலையில், சவுமியாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து படகு மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையின் உடலில் உரிய முறையில் துணி சுற்றாமல் அட்டைப் பெட்டியில் வைத்து தந்தையிடம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. உடலை வழங்க ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடலை கொண்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் தொடர்பாக பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com