மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா; தமிழக-கேரள பக்தர்கள் சாமி தரிசனம்...!

மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு தமிழக-கேரள பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா; தமிழக-கேரள பக்தர்கள் சாமி தரிசனம்...!
Published on

தேனி,

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்து உள்ளது. தமிழக-கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ள இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவிழா அன்று மட்டுமே கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கேரள மாநிலம் தேக்கடி வழியாக ஜீப்களிலும், கூடலூர் அருகே பளியன்குடியில் இருந்து மலைப்பகுதி வழியாக நடந்தும் பக்தர்கள் செல்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை இருமாநில அரசுகள் சார்பில் செய்யப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி திருவிழா இன்று நடக்கிறது. இதற்காக அதிகாலையில் கோவிலுக்கு விழாக்குழுவினர் சென்று கோவில் பகுதியில் மலர் தோரணங்களால் அலங்கரித்தனர்.

கண்ணகியை வழிபட இருமாநில பக்தர்களும் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக 230 ஜீப்கள் இயக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com