விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு

விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெற்றது.
விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு
Published on

சித்திரை திருவிழா

தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

அன்று முதல் தினமும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயம், பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம் என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விடையாற்றி உற்சவம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந்தேதி காலை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11-ம் திருநாளான நேற்று பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதைத்தொடர்ந்து காப்பு கலைதல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com