மோட்டார் சைக்கிள் மோதி சாக்லெட் கடை உரிமையாளர் பலி

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சாக்லெட் கடை உரிமையாளர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி சாக்லெட் கடை உரிமையாளர் பலி
Published on

உரிமையாளர் பலி

புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவர் புதுக்கோட்டையில் சாக்லெட் கடை நடத்தி வந்தார். ஆலங்குடி அருகே கே.வி. கோட்டையில் உள்ள இவரது நண்பரின் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அரசடிபட்டி கே.வி.கோட்டை அருகே வந்த போது, புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியை சேர்ந்த அப்துல் மன்னன் (45) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிந்த போது திடீரென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார்.

இதையடுத்து பின்னால் வந்த விஜயகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக அப்துல் மன்னன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அப்துல் மன்னன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜயகுமார் மனைவி சந்தனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com