சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி முதியவர் பலி

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி முதியவர் உயிரிழந்தார்.
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி முதியவர் பலி
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கம் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த முதியவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரி தட்டாஞ்சாவடி குண்டுபாளையம் பகுதியை சேர்ந்த மணி (வயது 75) என்பதும், அவர் மனைவியை பிரிந்து கடலூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளதும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று சொந்த வேலையாக நெல்லிக்குப்பம் வந்த மணி அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி உயிரிழந்ததும் தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

X

Daily Thanthi
www.dailythanthi.com