

சென்னை,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கிற்கு நேற்று முன்தினம் மாலை கோடம்பாக்கம் பவர் அவுஸ் பகுதியில் இருந்து குப்பைகள் லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டது. அப்போது கொட்டப்பட்ட குப்பையில், கை மற்றும் 2 கால்கள் இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று நடத்திய சோதனையில் அது பெண்ணின் கை மற்றும் கால்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அதில், வலது கையில் டிராகன் படமும் வலது கை தோள் பட்டையில் சிவன், பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. காலில் பெண்கள் அணியும் மெட்டி போட்டதற்கான அடையாளம் இருந்தது.
இதையடுத்து கை, கால்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கை கால்கள் எந்தப்பெண்ணுடையது என்பதை கண்டறிந்துள்ளனர். அந்தப்பெண் தூத்துக்குடியைச்சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சென்னை ஜபார்கான் பேட்டையில் வசித்து வரும் பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.