பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஆரணி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
Published on

ஆரணி

ஆரணி அருகே சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகர் 1-வது தெருவில் சுமார் 120 மீட்டர் உள்ள தெருவுக்கு 50 மீட்டர் தொலைவிற்கு மட்டும் 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு பக்க கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முழுமையாக செய்யாத இந்த பணி தேவையில்லை. முழுமையாக செய்தால் பணியை செய்யுங்கள்.

இல்லை என்றால் வேலை வேண்டாம் என பணியை தடுத்து நிறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இல.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தனர்.

தற்போது 50 மீட்டர் பணி செய்ய ரூ.2.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மீதிப்பணியினை விரைவில் முதல் பணியாக எடுத்து இப்பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com